By Preethi N C
இன்று என்னை சுற்றி சுடரொளிமயம்
இன்பமென்னும் நெய்யிட்டு
அன்பு என்னும் திரி கொண்டு
என் வாழ்வினை ஏற்றி வைத்தாய் !
இன்னல் என்ற மின்னல் வெட்டியபோது
அதை கண்டு கலங்குவது பேதைமை என்று
வல்லமை உரைத்து இருளகற்றி தெளியவைத்தாய் !
உழைப்பாளிக்கு வெற்றியென்பது தூரமில்லை
தோல்வியென்பது துயரமில்லை
கற்று கொண்ட அனைத்தும் நம் வாழ்வு
மலரவுதவுமென அறியவைத்தாய் !
கண்ணீருடன் தேய்ந்து நின்றால் ,மனம் தேற்றி,
முழுமதியாய் விளங்குமாறு துணை புரிந்தாய் !
நாம் இருவரும் வலிகளை பரிமாறினோம் - நானோ
நீ தந்த வலியினால் (வலிமையினால்) நற்கதி பெற்றேன் - நீயோ
நான் தந்த வலியினால் கதறியழுதாய் !
இப்பாவம் ஒழிய
என் விருப்பாலே உன் திருப்பாதம் வணங்கிடவே
இக்கவி புனைந்து புகழாரம் அளித்து நின்றேன்!
நான் பெற்ற சுகமனைத்தும்
என் குழவி அடைந்திடவே
வழுவாத உன் நெறியில் என்றென்றும் வழி நடப்பேன் !
யாம் செய்த முற்பிறவி பயன் பொருட்டே
இப்புனிதமுறு உறவு பெற்றேன் - ஆம்
அத்தகு இனியவளை
இப்பாவில் ஐந்து முறை குறிப்பிட்டுள்ளேன் !
இன்று நான் ஒளி மிகுந்து காணப்பட்டாலும்
நான் ஆதவனல்ல
என்றும் என்றென்றும் உன் ஆதரவு
பெற்றொளிரும் முழுமதிதான் !