Duraiikkannan Govindaraj
துவக்கம்
வெல்டர் பிட்டர் கார்பெண்டர் போன்ற
படிப்புகளுக்கு கூட இங்கே படி அளக்கணும்.
பெட்டிக்கடை ஒன்று வைப்பதாயினும்
கட்டு கட்டாக கத்தைகள் வேணும்.
உங்களோட வேலைக்குத்தான் ஏனோ இங்கே
படிப்பும் இல்லை பட்டமும் இல்லை.
பையனைப் பெத்த அப்பாவுக்கு
நயா பைசா நட்டமும் இல்லை.
உங்கள் தொழில்தான் நாட்டிலேயே
செலவு என்று பார்த்தால் வெறும் மூக்கு பொடி.
இன்று நினைத்தால் நாளைக்கே டிரைவர்
ஏழை இளைஞனுக்கு பிழைப்பு ரெடி .
இத்தனை ஈஸியாய் கிடைக்கிற தொழிலை
அத்தனை தூசியாய் நினைப்பது சரியா?
ஒழுக்கமே இல்லாமல் ஓட்டலாம் என்பது
தொழிலை தெய்வமாய் மதிக்கும் முறையா?
தூக்கம்
களைப்பின் மிகுதியால் வேலை நேரத்தில்
தூங்குவோர் என்போர் சிலருண்டு.
ஆனால்,
தூங்கிக்கொண்டே வேலை செய்வோர்
உங்களைத்தவிர யாருண்டு?
தூக்கம் வந்தாலும் தூங்கக் கூடாதென
யார் இங்கு உன்னை தடுத்தார்கள்?
கண் விழித்தவாறே கண் அயர உனக்கு
யார் இங்கு சொல்லி கொடுத்தார்கள்?
குடும்பத்தின் மேல் அக்கறை இருந்தால்
தூக்கம் என்பது மறந்தே போகும்.
நாம் இல்லை என்றால் அவர் கதி நினைக்க
வந்த தூக்கமும் பறந்தே போகும்.
குடும்பத்தின் மேல் அக்கறை இருந்தால்
தூக்கம் என்பது மறந்தே போகும்.
நாம் இல்லை என்றால் அவர் கதி நினைக்க
வந்த தூக்கமும் பறந்தே போகும்.
அரை மணி தூங்கி அரைத் தூக்கம் போக்கி
அசதிக்கு விடை நீ கொடுப்பாயே!
கவனமாய் நீயும் கருத்தாய் ஓட்டி
சாலையில் சோகங்கள் தடுப்பாயே!
குடியும் அதன் கேடும்
உங்கள் போதை எங்களுக்கு போடுகிறது
சுடுகாட்டுக்கு பாதை.
உங்களின் குடியால் நிலை குலைந்து
போகிறது எங்களின் குடி.
நடை மேடை மேலேறி சிவனேன்னு போனாலும்
அதன் மேலே ஏறி வந்து எம் மேல மோதுற!
நடந்து போகலாம்னு இறங்கினா தெருவுல
நீ வந்து நிக்கிற எமனோட உருவுல!
மிதியடி வெளியே உள்ளே வெறுங்காலில் வேலை.
சிற்சில ஊர்களில் இன்னும் அத்தனை பவித்ரம்.
நீயோ உன் இருக்கையில் குடியோடு குடித்தனம்.
நீ ஸ்டீயரிங் தொட்டு நடத்துற பூஜை வடிகட்டிய மடத்தனம்.
நின்றால் நூறு நிமிர்ந்தால் குவார்ட்டர் என்று
போடுவதை முதலில் நீ நிறுத்து!
உன் சொந்தபந்தங்கள் சொகுசாய் இருப்பதெல்லாம் நீ
உயிரோடு இருப்பதை பொறுத்து!
குடிகார டிரைவர் வீட்டில் அமைதி என்றும் இல்லையே: அந்த
கருமத்தை விட்டொழிக்க வாழ்வில் இன்பம் கொள்ளையே!
குடியும் காப்பீடும்
காப்பீட்டுக் கழகம் உன்னை காக்க வந்த கழகம்.
உனக்கேதும் ஆகிவிட்டால் ஓடிவரும் கழகம்.
நீ வாய கட்டி வயித்த கட்டி கட்டுகின்ற பணம்,
தேடி வரும் திரும்ப வரும் தேவைப்படும் தினம்.
ஆனால் நீ ஓட்டும்போது குடித்திருந்தால்
அந்த வீணாப்போன சரக்கை நீ அடித்திருந்தால்
கழகம் உதவாது; கால் காசு கொடுக்காது.
அழுதே புரண்டாலும் அஞ்சு பைசா பெயராது .
கட்டிய பணத்தை எல்லாம்
கழகமே எடுத்துக்கும்.
உன் குடும்பம் ஓடி வந்து
நடுத்தெருவில் படுத்துக்கும்.
இதைப்பார்க்க நீயும் இங்கே
இருக்கப்போவதில்லையே!
பார்த்தாக்கா நீயும் இதை
ரசிக்கப்போவதில்லையே!
வேகம்
ஐந்து நிமிட தாமதம் என்றால்
அதனால் ஒன்றும் குடி முழுகாது
விவேகமான வேகம் என்றால்
ஒரு நாளும் மரண அடி விழுகாது.
பிரதானம் ஓட்டுநர்க்கு யாதெனில் ஓட்டுகையில்
நிதானம் தவறாமல் ஓட்டலே!
பணிக்கு செல்வதில் தாமதம் என்றால்
பாஸுக்கு பதில் சொல்லி ஆகனும் .
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் கிளம்பினால்
சாலையில் ஜெட் வேகம் போகணும்.
அதிவேகமாக அறிவு கெட்டு ஓட்ட
ஆசை இருந்தால் நீ ஓட்டு!
எந்த நிமிடமும் எமனோடு கை குலுக்க
போட்டு கொடுக்கும் அது ரூட்டு .
பத்து நிமிடம் முன்னால் கிளம்பி .
பதட்டம் இன்றி பயணிக்கப் பழகு.
ஐந்து நிமிடம் முன் சென்று சேர்ந்து
அழுத்தம் இன்றி வாழ்வது அழகு.
மொபைல் போன்
ஓட்டும்போது கைபேசி எதையும்
கையிலெடுக்கவேலாகாது.
பேசியே தீரணும் என்ற நிலை வந்தாலும்
ஓட்டும்போது கூடவே கூடாது.
ஒரு கண்ணை ரோட்டிலே மறு கண்ணை போனிலே;
வைத்தவர் பாடி ஆடுமே ஆம்புலன்ஸ் வேனிலே!
ஓட்டுதல் நிறுத்தி ஓரங்கட்டி பேசினால்
ஒரு சில நிமிடம்தான் வீணாய்ப்போகும்!
நிறுத்தாமல் பேசி நேரும் தவறால்
கை கால்கள் எல்லாம் காணாய்ப்போகும்!
கை கால் போனால் கடைசி வரையில்
உனக்கே நீ ஒரு பாரம்தானே!
கண்ணு மூக்கு காதுகள் போனால்
உக்காத்தி வைப்பார்கள் ஓரம்தானே!
எப்படி இருந்த நாம் இப்படி ஆனோம்
என்றெண்ணி நொந்து நூலாவாயே!
இழந்த வாழ்க்கை திரும்ப வருமா
என்றே தினம் எண்ணிச் சாவாயே!
அரசும் நீங்களும்
விபத்தில்லா பயணங்களை விளம்பரங்கள் பறைசாற்ற;
உஷார்ப்படுத்தும் பலகைகள் ஊரெங்கும் வழி காட்ட;
அம்மம்மா, அரசு செய்யும் செலவுகளோ கொஞ்சமில்லை.
ஆனாலும் விபத்துக்கள் சாலைகளில் பஞ்சமில்லை.
விபத்து நடந்த மறு நிமிடம் விரைந்து வரும் ஆம்புலனஸ்!
இல்லை என்றால் அடங்கிவிடும் பல பேரின் ஐம்புலன்ஸ்!
ஆறு வழி எட்டு வழி அகல சகல ரோடு!
அதில் அலுங்காமல் குலுங்காமல் போக என்ன கேடு?
மொசைக் போட்ட தரைய போல பளபளக்குது சாலை!
உன் ஓட்டுற வேலைய சுலபமாக்க அது அரசு செய்த வேலை!
ஒரு ஓட்டுனருக்கு ஒரு போலீஸ் போட
முடியாது ஊரே சொல்லும்.
நீங்களா பார்த்து திருந்தினால் மட்டுமே
சாலைப்பாதுகாப்பு வெல்லும்.
விபத்துக்களை தடுக்கத்தான் அரசு முனையிது நாளும்.
நமக்குத்தான் ஒத்துழைக்க மனசு இல்லை போலும்!
ஒழுங்காக ஓட்டு என்று அரசு சொல்லத்தான் முடியும்.
கேட்டால்தான் விபத்தில்லா பொழுதுகள் சில விடியும்!
நீங்களும் பாதுகாப்பும்
ஒவ்வொரு பிரிவும் மரணத்தின் நிழல் என்பார்; ஆனால்
ஓட்டுநர்க்கு மட்டும் மரணமே நிழல் என்பேன்.
நித்ய கண்டம் பூர்ண ஆயுசு பிழைப்பே உங்க பிழைப்பு!
பாத்து பயந்து ஓட்டாட்டி எமன் விடுவான் அழைப்பு!
வேகமாய் ஓட்ட ஆக்சிலரேட்டர்;
விவேகமாய் ஓட்ட பக்கத்திலேயே பிரேக்;
ஹாரனை வச்சான் கைக்குள்ளேயே;
பாதுகாப்புக்கெல்லாம் பஞ்சம் இல்லையே!
காற்றடைத்த பைகளை (மனித உயிர்களை) கட்டிக்காக்க,
காற்றடித்த பைகள் காருக்குள்ளே!
ஏர் pack பண்ணி ஏர் bag பண்ணி,
எல்லாமே நம்முடைய பாதுகாப்பை எண்ணி!
கண்டு பிடிச்சவன் ரொம்ப கஷ்ட்டப்பட்டான்.
நம்ம சேப்ட்டியை பத்தி நிறைய கவலை பட்டான்.
அத்தனையும் மீறி தப்பா ஓட்டினா,
தப்பாகிவிடுமே என்ற பயம் வேண்டாமா?
விதியைச் சொல்லி தப்பிக்க நினைத்தால்
ஆறாம் அறிவுக்கு பொருள் வேண்டாமா?
கார் பஸ் ஓட்டும்போது கார் பஸ்தான் ஓட்டணும்.
ஏர் பஸ் மாதிரி ஓட்டினா விபத்தில்தான் மாட்டனும் .
எதிரே வந்தவன் தவறால் விபத்தா
பழியைத் தூக்கி விதி மேல் போடு.
உன்னால் ஒரு போதும் ஒரு கீறல் கூட
யார் மீதும் விழாமல் ஆட்டத்தை ஆடு!
ஓட்டுநர்களும் பொறுப்பும்
மற்ற வேலைகளில் தவறென்று வந்தால்
வெறும் மனக்கஷ்டம் கொஞ்சம் பணக்கஷ்ட்டம்.
உங்கள் வேலையில் ஒரு சிறு தவறும்
கை கால் தலை என நொடியினில் சிதறும்.
ஓட்டுநர் இருக்க வேண்டும்
எப்போதும் நிதானத்தில் - இல்லெனில்
வீட்டினில் தலை இருக்கும்,
கால் இருக்கும் மயானத்தில்.